Published : 22 Jan 2021 04:47 PM
Last Updated : 22 Jan 2021 04:47 PM

பிப்.18-ல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு இல்லை; ஆன்லைனில் வகுப்புகள்- அண்ணா பல்கலை. தகவல்

பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறக்கப்படாது என்றும், ஆன்லைனிலேயே வகுப்புகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் மே 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 24-ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 2-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் நடக்கவுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன, ஏப்ரல் 26-ம் தேதி அன்று எழுத்துத் தேர்வுகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் இதற்காக பிப்ரவரி 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகின. எனினும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்லைன் வழியாகவே கற்றல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்துப் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆன்லைன் மூலமாகவே கற்பித்தல் நடைபெறும். இப்போதைய சூழலில் கல்லூரிகள் திறக்கப்படாது. குறைந்தபட்ச வேலைநாட்களை உறுதி செய்யும் விதத்தில், அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x