Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஜனவரி 24-ம் தேதி நுழைவுத்தேர்வு: தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சிக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு, வரும் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறை டைரக்டர் ஜெனரல் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2021-ம் ஆண்டில் யுபிஎஸ்சி நடத்தும் குடிமைப் பணிகளுக்கான (ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ்) முதல்நிலைத் தேர்வுக்கு சென்னையில் இயங்கி வரும் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற ஆர்வமிக்க தமிழக மாணவர்களிடம் இருந்து இணையவழியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதன்படி 6,699 பேர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், இலவச பயிற்சி பெறுவதற்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு வரும் 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் 16 மையங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற இருக்கிறது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற்ற 2020-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வை தமிழக அரசு பயிற்சி மையத்தில் இருந்து 86 பேர் எழுதியுள்ளனர்.

இவ்வாறு இறையன்பு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x