Last Updated : 19 Jan, 2021 01:54 PM

 

Published : 19 Jan 2021 01:54 PM
Last Updated : 19 Jan 2021 01:54 PM

மதுரையில் களைகட்டிய பள்ளி வளாகங்கள்: மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று அரசு, தனியார், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மதுரையில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடந்தன. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன. அரசுப் பள்ளிகளிலும் கல்வி தொலைக்காட்சி, சமூக வலைதளம் போன்ற சில நடைமுறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கிற்கான தளர்வு நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

மதுரை மாவட்டத்திலுள்ள 534 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாநகராட்சிக் கல்வி அதிகாரிகள் இதை உறுதி செய்தனர்.

மதுரை மண்டலத்திற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்ட இயக்குநர் ராமேசுவர முருகன், முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், நேர்முக உதவியாளர்கள் சின்னத்துரை, ரகுபதி உள்ளிடோர் ஒத்தக்கடை அரசுப் பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே பாதுகாப்பு நெறிமுறைகள், நிபந்தனைகள் குறித்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், இதற்கான சிறப்புக் குழுக்களும் பள்ளி வளாகத்தில் நியமிக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மாணவ, மாணவியும் முகக்கவசம் அணிந்து, சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்தபின், உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று, வகுப்பறைக்கு அனுப்பினர். முதலில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக அறிவுறுத்தியபின், பாடம் குறித்துப் பேசினர். சக ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி வளாகங்களில் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

இதுகுறித்துக் கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ''மாணவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களில் சானிடைசர், முகக்கவசம் அணிந்து செல்வதை உறுதிப்படுத்தச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் மட்டுமே இடம்பெறுவர். மாணவர்களைக் கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களைத் தங்களது கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் போன்ற பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x