Published : 19 Jan 2021 12:17 PM
Last Updated : 19 Jan 2021 12:17 PM

தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் உடல் வெப்பநிலை அறிந்த பின்பே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் | படம்: எஸ். குருபிரசாத்.

தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டன. முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குக்கு முன்பே கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதும், பள்ளிகள் திறக்கப்படாமலே இருந்தன. பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வந்தது.

இது தொடர்பாகக் கடந்த ஜனவரி 6 முதல் 8-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தனர். அதில் பெரும்பாலானோர் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

படம்: எஸ். குருபிரசாத்

அவர்களின் விருப்பப்படி, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அத்துடன் பள்ளிகள் திறக்கப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பின் மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முன்னதாக தண்ணீர், கழிப்பறை வசதி, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த துப்புரவு ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பள்ளிகளை ஆய்வு செய்தனர்.

சென்னை, கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் நுழையும்போதே மாணவர்களுக்கு வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி நுழைவுவாயிலில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்திய பின்னரே ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளே நுழையவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.

படம்: ஜெ.மனோகரன்

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தரையில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் இருக்கைகளும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வந்ததால் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

அதேபோல மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளும் ஜிங்க் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தாள், அச்சடித்து வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x