Published : 16 Jan 2021 01:39 PM
Last Updated : 16 Jan 2021 01:39 PM

பள்ளிகள் திறப்பு: 18-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளிகளைத் திறப்பது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து, ஜனவரி 18-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த 10 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதள வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குப் பின் பள்ளிகளைத் திறக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அறிக்கை அளிக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி, கிருமிநாசினி தெளிக்கும் முறை, வகுப்பறைகளின் சுத்தத்தை உறுதி செய்தல், கழிப்பறைகளின் தூய்மையை உறுதி செய்தல், வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி, முகக் கவசங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கத் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 18-ம் தேதி மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x