Published : 07 Jan 2021 06:36 PM
Last Updated : 07 Jan 2021 06:36 PM

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுத் தேதி அறிவிப்பு: 75% மதிப்பெண்கள் தகுதி நீக்கம்

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், தேர்வெழுத 75% மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்குவதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்றும், தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் இத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26 வரை தேர்வு நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்தது. தேர்வுத் தேதியை 7-ம் தேதி (இன்று) வெளியிட உள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ட்விட்டர் நேரலையில் பேசிய அமைச்சர், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். ஐஐடி காரக்பூர் இந்தத் தேர்வை நடத்த உள்ளது.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜேஇஇ தேர்வை எழுத அனைத்து மாணவர்களும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x