Published : 06 Jan 2021 01:03 PM
Last Updated : 06 Jan 2021 01:03 PM

மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவினருக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வு: 437 இடங்கள் நிரம்பின

மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவினருக்கான 2-ம் கட்டக் கலந்தாய்வில் 437 மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கலந்தாய்வு ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் கடந்த நவ.18-ம் தேதி தொடங்கி டிச.10-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடந்தது.

இதற்கிடையே 2-ம் கட்டக் கலந்தாய்வு ஜன.4ஆம் தேதி தொடங்கி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று (ஜன.6) காலை தொடங்கியது. கலந்தாய்வில் 2 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், தகுதி வாய்ந்த 437 மாணவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 26 மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று அரசுக் கல்லூரிகளில் 170 காலி இடங்களுக்கும், சுயநிதிக் கல்லூரிகளில் 209 காலி இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல பிடிஎஸ் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் 68 காலி இடங்களும் சுயநிதிக் கல்லூரிகளில் 965 காலி இடங்களும் உள்ளன.

ஜனவரி 11-ம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11-ம் தேதி பிற்பகல் முதல் 13-ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x