Published : 05 Jan 2021 07:47 AM
Last Updated : 05 Jan 2021 07:47 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது; 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம்: 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 446 பேர் பயன் அடைந்தனர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் 2-ம் கட்ட கலந்தாய்வில் மேலும் 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் கடந்த நவ.18-ம் தேதி தொடங்கி டிச.10-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிச.10 முதல் 23-ம் தேதி வரை நடந்தது.

இந்நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட
ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ் படிக்க 23 பேருக்கும், பிடிஎஸ் படிக்க 24 பேருக்கும் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிக்க 313 பேருக்கும், பிடிஎஸ் படிக்க 86 பேருக்கும் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. தமிழக அரசின், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க 336 பேரும், பிடிஎஸ் படிக்க 110 பேரும் என மொத்தம் 446 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

3 மாணவிகளுக்கு இடம்

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிக கட்டணம் என்பதால் முதல்கட்ட கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யாமல் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் சென்றுவிட்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, மாணவிகள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த கலந்
தாய்வில் இந்த மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி, நேற்றைய கலந்தாய்வில் மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. சில நிர்
வாக பிரச்சினைகளால் காலையில் தொடங்க வேண்டிய கலந்தாய்வு நண்பகலுக்கு பின்னர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் 11-ம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11-ம் தேதி பிற்பகல் முதல் 13-ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x