Published : 04 Jan 2021 12:33 PM
Last Updated : 04 Jan 2021 12:33 PM

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக அரசு நடத்தும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்காக அரசு நடத்தும் இலவசப் பயிற்சி இன்று இணையம் மூலம் தொடங்கியுள்ளது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுதுவதற்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி இணைய வழியில் வழங்கப்படுகிறது. இதற்காக டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள் இன்று (ஜனவரி 4-ம் தேதி) தொடங்கி உள்ளன. இதில் பங்கேற்க 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் பதிவு செய்துள்ள மாணவர்களுக்குத் தனித்தனியே உள்நுழைவு முகவரி மற்றும் கடவுச் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பயிற்சி பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கும் உள் நுழைவு முகவரி, கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்களைப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கத் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x