Published : 02 Jan 2021 05:16 PM
Last Updated : 02 Jan 2021 05:16 PM

குரூப்-1 தேர்வு 856 இடங்களில் நடைபெறுகிறது: மாணவிகளே அதிகம் விண்ணப்பம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வில் மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

18 துணை ஆட்சியர் இடங்கள், 19 டிஎஸ்பி காலி இடங்கள், ஊரக வளர்ச்சி உதவிஇயக்குநர், 14 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் இடங்கள், 10 வணிகவரி உதவி ஆணையர் இடங்கள், 1 மாவட்டத் தீயணைப்பு அலுவலர் இடம் ஆகிய உயர் பதவிகளில் மொத்தம் 66 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஏப்.5-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா காரணமாக ஜன.3-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிறு) நடைபெற உள்ளது.

இதற்காக 32 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 856 இடங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வர்களைக் கண்காணிக்கும் பணியில், தலைமைக் கண்காணிப்பாளர்கள் 856 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் 150 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 46,965 விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். முதல்நிலைத் தேர்வுக்கு 1,28,401 மாணவர்கள், 1,288,25 மாணவிகள் மற்றும் 11 மாற்றுப் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொது அறிவுத் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் ‘ஒரு காலியிடத்துக்கு 50 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்வில் இருந்து அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில், தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 66 ஆக இருப்பதால் 3,300 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

மொத்தம் 3 தாள்கள் உள்ளடக்கிய மெயின் தேர்வில் விரிவாக விடையளிக்க வேண்டும். அதில்வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x