Last Updated : 31 Dec, 2020 02:32 PM

 

Published : 31 Dec 2020 02:32 PM
Last Updated : 31 Dec 2020 02:32 PM

கோவை, செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மெய்நிகர் வகுப்பறை: அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்

கோவையை அடுத்த சுல்தான்பேட்டை அருகில் உள்ள செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மெய்நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மெய்நிகர் வகுப்பறையைத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

“உலகில் கல்வியின் முன்னோடியாகத் திகழும் பின்லாந்து நாட்டின் கல்வி முறையில் மெய்நிகர் கற்பித்தல் முறையும் ஒன்றாகும். இம்முறையானது செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்படுவது சிறப்பானது.

இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் உயர் தொழில்நுட்பத்துடன் கல்வி கற்க முடியும். இதில் பாடப்பொருள் சார்ந்த ஒளிப்பதிவுகள், பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 3D வடிவில் காட்சிப்படுத்தப்படும். அறிவியலில் மனித உடல் உள்ளுறுப்புகள், தாவர விலங்கு செல்களின் அமைப்பு, மனித மூளையின் பாகங்கள், சமூகவியலில் பூமியின் அமைப்பு, சூரிய மண்டலம், கோள்கள், போக்குவரத்து விதிகள் என அனைத்துப் பாடங்களும் நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும்.

இதனால் பாடங்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான வகுப்பு மற்றும் பாடங்களைத் தேர்வு செய்து கற்றுக் கொள்ளலாம். வழிகாட்டி ஆசிரியரின் உதவியோடு உலகில் உள்ள அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும். இதனை நல்ல முறையில் பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் அறிவுத் திறனைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

விழாவில் சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி.கந்தசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x