Published : 28 Dec 2020 07:15 AM
Last Updated : 28 Dec 2020 07:15 AM

தேர்வு நடைமுறையில் புதிய மாற்றங்கள்: தேசிய தேர்வு முகமை ஜேஇஇ குறித்து விளக்கம்

ஜேஇஇ தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு எழும் பரவலான கேள்விகள், சந்தேகங்களுக்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதல்நிலை தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜேஇஇ முதல்நிலை தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்களை மத்திய கல்வி அமைச்சகம் செய்தது. அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என ஆண்டுக்கு 4 முறை முதல்நிலை தேர்வு நடத்தப்படும். தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் இத்தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது 4 முறை தேர்வை எழுதலாம். அதில் அவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்யும் விதமாக, தேர்வு குறித்து பரவலாக கேட்கப்படும் சந்தேகங்களுக்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

இணையதளத்தில் விவரம்

ஒவ்வொரு முறை தேர்வு எழுதும்போதும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 36 பொதுவான கேள்விகளுக்கு அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் காணலாம். மாணவர்கள் தங்கள் கேள்விகள், சந்தேகங்களை என்டிஏவுக்கு தெரியப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜேஇஇ தேர்வை எழுத முடியாத மாற்றுத் திறன் மாணவர்களின் உதவியாளருக்கு அனுமதி கோரும் கடிதமும் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. மேலும், கட்டண விவரங்கள், தேர்வுக்கான முழு வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x