Published : 24 Dec 2020 02:04 PM
Last Updated : 24 Dec 2020 02:04 PM

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவுக் கலந்தாய்வு தொடக்கம்: ஆன்லைனில் நடக்கிறது

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவுக் கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. புதிதாக சேலம்- தலைவாசல், தேனி - வீரபாண்டி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் படிக்க 2020- 21ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அக்.9-ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். மொத்தம் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்பட்டது.

இதற்கிடையே சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (டிச.23) நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்க 118 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 59 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில், தகுதியான 20 பேருக்குக் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், 28-ம் தேதி மாலை 6 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். தகுதியான மாணவர்களுக்குக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணை 30-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அந்த ஆணையைப் பதிவிறக்கம் செய்து, ஜன.13-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.tanuvas.ac.in/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x