Published : 24 Dec 2020 12:49 PM
Last Updated : 24 Dec 2020 12:49 PM

ஆன்லைனில் ஜனவரி மாதம் செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதையடுத்து இறுதிப் பருவத்தேர்வைத் தவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். இறுதிப் பருவத் தேர்வு இணையம் மூலம் நடத்தப்பட்டு முடிவுகளும் அண்மையில் வெளியாகின.

இதற்கிடையே டிசம்பர் 7 முதல் இறுதியாண்டு மாணவர்களுக்காக உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்ட நிலையில், ஐஐடி சென்னை, மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளும் ஜனவரி மாதம் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில், "நடப்பு செமஸ்டர் செய்முறைத் தேர்வுகள் இதே மாதத்தில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் 2021 ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும். ஆன்லைன் தேர்வுகளை முறையான கண்காணிப்பாளர்கள் கொண்டு கண்காணிப்பதைக் கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் கலந்துகொள்கிறார்களா என்பதை அவர்களின் அரசு புகைப்பட அடையாள அட்டை அல்லது கல்லூரி அடையாள அட்டையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

இதுதொடர்பாக மண்டல அலுவலகத்துடன் கல்லூரிகள் தொடர்பில் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடைபெறும் தேர்வுகளில் 20 மாணவர்களுக்கு 1 கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும்.

தேர்வு குறித்த கால அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x