Published : 23 Dec 2020 01:49 PM
Last Updated : 23 Dec 2020 01:49 PM

2019 தேர்வர்களுக்கு 2021 ஜேஇஇ தேர்வெழுத அனுமதி இல்லை: புதிய விதிமுறைகள் வெளியீடு

2021 ஜேஇஇ தேர்வு குறித்த புதிய விதிமுறைகளைத் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2019-ம் ஆண்டு ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்களுக்கு 2021 ஜேஇஇ தேர்வெழுத அனுமதி கிடையாது.

ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகளை, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை அண்மையில் அறிவித்தது. இதன்படி ஒரு ஆண்டில் நான்கு முறை ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியும். முதல்கட்டமாக பிப்ரவரி மாதம் 22 முதல் 25 ஆம் தேதி வரை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 329 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்வுக்கான இதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,

'' * தேர்வர்கள் ஒரு ஆண்டில் நான்கு முறை ஜேஇஇ தேர்வுகளை எழுத முடியும். இந்த நான்கு தேர்வுகளில் பங்குபெறும் தேர்வர்கள் தாங்கள் நான்கு தேர்வுகளில், அதிகம் பெற்ற தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

* ஜேஇஇ மெயின் தேர்வில், பி.இ., பி.டெக். படித்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அதற்குப் பிறகு அவர்களின் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அட்வான்ஸ்டு தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

* முன்னதாக 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 2020 ஆம் ஆண்டு ஐஐடியில் சேர்ந்தவர்களுக்குத் தேர்வெழுத அனுமதி கிடையாது.

* 2020 ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்று, கரோனா காரணமாக அட்வான்ஸ்டு தேர்வை எழுத முடியாதவர்கள், நேரடியாக 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x