Published : 19 Dec 2020 03:42 PM
Last Updated : 19 Dec 2020 03:42 PM

1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு தேதிகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 1,141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 23-ம் தேதியன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்கு முதலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு எதிரொலியாக சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 1,141 காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் 2,015 தேர்வர்கள் கலந்துகொண்டனர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக 1,942 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இருந்து நேர்காணல் தேர்வுக்கு 1,907 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு 1,907 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விண்ணப்பதாரர்களின் பதிவெண் விவரம் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு 04.01.2021 முதல் 08.01.2021 வரை, 11.01.2021, 12.01.2021, 18.01.2021 முதல் 23.01.2021 வரை, 25.01.2021, 27.01.2021 முதல் 29.01.2021 வரை நேர்காணல் தேர்வு நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x