Published : 19 Dec 2020 01:39 PM
Last Updated : 19 Dec 2020 01:39 PM

பத்மாசனத்தில் 1 கி.மீ. தூரத்துக்கு நீச்சல்: அரசுப் பள்ளி ஆசிரியர் சாதனை

உடுப்பி

பத்மாசனத்தில் 1 கி.மீ. தூரத்துக்கு நீச்சல் அடித்து, கர்நாடக அரசுப் பள்ளி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகாவில் உடுப்பி மாவட்டம் குண்டாபூர், கல்மஞ்சா அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் நாகராஜ் கார்வி. நீச்சலில் வல்லவரான இவர், தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் இரண்டு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கர்நாடகாவின் தனிர்பாவி கடற்கரையில், கால்களைக் கட்டிக்கொண்டு, பத்மாசனத்தில் 1 கி.மீ. தூரத்துக்கு நீச்சல் அடித்து, சாதனை படைத்துள்ளார். இந்த தூரத்தை 25 நிமிடங்கள் 16 நொடிகளில் கடந்துள்ளார். வடக்கு நோக்கிக் காற்று வீசியபோதும், நாகராஜ் தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து, தெற்கு நோக்கி நீந்தி இலக்கை அடைந்தார்.

இவரது சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிம்கா சாதனைப் புத்தகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் நாகராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''என்னுடைய பயிற்சியாளர் கிருஷ்ணா நாயக் எனக்கு உதவிகரமாக இருந்தார். நீச்சலில் இதுவரை யாரும் பத்மாசனம் இட்டு, நீந்திச் சாதனை படைத்ததில்லை.

பொதுமக்களிடையே நீச்சல் மற்றும் யோகாவின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x