Published : 17 Dec 2020 01:57 PM
Last Updated : 17 Dec 2020 01:57 PM

பொறியியல் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 4 அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே இடம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான ஏப்ரம்- மே மாத செமஸ்டர் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போலத் தனியார் கல்லூரி மாணவர்களே அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், 13 உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உட்பட 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இக்கல்லூரிகளில் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஏப்ரம்- மே மாத செமஸ்டர் தேர்வு, கடும் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கான மறுதேர்வும் அண்மையில் நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலைப் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான ஏப்ரம்- மே மாத செமஸ்டர் மதிப்பெண்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இளநிலைப் பிரிவில் வழக்கம்போலத் தனியார் கல்லூரி மாணவர்களே அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக மாணவிகளே இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர். ஆட்டோமொபைல், சிவில், இசிஇ, மெக்கானிக்கல் ஆகிய 4 பொறியியல் பிரிவுகளில் தலா 1 மாணவர் வீதம் 4 அரசுக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

இது தொடர்பான புள்ளிவிவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

''மாணவர்களின் தரவரிசைப் பட்டிலைப் போலவே மாணவர்கள் பெறும் ரேங்க் அடிப்படையில், கல்லூரிகளின் ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 6 ஆண்டுகளாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது''.

தரவரிசைப் பட்டியல் குறித்து மேலும் விவரங்களை அறிய: https://aucoe.annauniv.edu/webrank/APR2020/ug_aff_2020.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x