Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஜன.4 முதல் இலவச பயிற்சி- தனியார் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்

சென்னை

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஐஐடி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்க, நெக்ஸ்ட்ஜென் வித்யா நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப் பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு, இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்களில் (ஐஐடி) சேரஏதுவாக, டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் ‘நெக்ஸ்ட்ஜென் வித்யா’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறை செயலாளர் தீரஜ்குமார் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளை தொழில்நுட்பக் கல்வி சார்ந்த ஐஐடி, ஜேஇஇ போன்ற உயர்கல்விக்கான போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியபாடங்களில் இப்பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே உள்நுழைவு முகவரி (Login ID), கடவுச்சொல் (Password) வழங்கப்படும். மாணவர்கள் பயிற்சி பெறுவதை கண்காணிக்கும் வகையில் பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கும் உள்நுழைவு முகவரி, கடவுச்சொல் வழங்கப்படும். இதில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கான பதிவு வரும் 21-ம் தேதி முதல் 31-ம்தேதி வரை நடைபெறும். பயிற்சி வகுப்புகள் 2021 ஜன.4-ம்தேதி முதல் தொடங்கும். இப்பயிற்சிக்கான பதிவு மற்றும் இணையதள முகவரி https://play.google.com/store/apps/details?id=com.vidhyaeducation.android ஆகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில், நெக்ஸ்ஜென் வித்யா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரவ், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x