Published : 15 Dec 2020 01:17 PM
Last Updated : 15 Dec 2020 01:17 PM

ஐஐடியில் கரோனா தொற்று எதிரொலி: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

கோப்புப்படம்

ஐஐடி சென்னை மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் வசிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது.

கரோனா பொதுமுடக்கத் தளர்வுகளில் ஒரு பகுதியாக டிசம்பர் 7ஆம் தேதி முதல் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கவும் விடுதிகள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரிகள் செயல்படத் தொடங்கின.

ஐஐடி சென்னையில் நேற்று வரை 104 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 79 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இதற்காக விடுதியில் மாணவர்கள் தங்கி இருந்தனர். இதில் ஒருவருக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதி மாணவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யும் பணி இன்று தொடங்கியது. இறுதியாண்டு மாணவர்கள் 700 பேர் தனித்தனியாக அறைகளில் வசித்து வரும் நிலையில், முதல் கட்டமாகத் தற்போது 100 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் குறிஞ்சி, ஆம்பல் விடுதி மாணவர்களுக்குப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்துக் கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன் கூறும்போது, ''சென்னை மாநகராட்சியில் இருந்து 4 குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் 4 விடுதிகளில் வசிக்கும் தலா 100 பேருக்குச் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 400 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்படும் என்று நம்புகிறேன்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதிகள் தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றன. பெற்றோர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x