Published : 09 Dec 2020 05:59 PM
Last Updated : 09 Dec 2020 05:59 PM

மாணவர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் நாளை கலந்துரையாடல்; பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கக் கோரிக்கை

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை (டிச.10) மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாடும் நிலையில், பொதுத்தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி மாணவர்கள் இணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

கரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத்திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது.

இதற்கிடையே, பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் கல்வி அமைச்சரிடம் தங்களின் கருத்துகளை மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதில், பெரும்பாலான மாணவர்கள் பொதுத்தேர்வுகளை மே மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தேர்வுகள் குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், மத்திய கல்வி அமைச்சர் அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்கள், தங்களுக்குக் குறைந்தது 3 மாத காலமாவது நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தினால் மட்டுமே பொதுத்தேர்வைத் தங்களால் எதிர்கொள்ள முடியும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்னும் சில மாணவர்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் நீட் 2021, ஜேஇஇ 2021 தேர்வுகளின் பாடத்திட்டம், தேர்வுத் தேதி ஆகியவை குறித்தும் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை (டிச.10) மாணவர்களுடன் வெபினார் மூலம் கலந்துரையாட உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x