Published : 07 Dec 2020 01:32 PM
Last Updated : 07 Dec 2020 01:32 PM

குழந்தைகள் உரிமைகளுக்கான நெருக்கடியாக மாறிய கரோனா பெருந்தொற்று: யுனிசெஃப் வேதனை

சுகாதாரப் பெருந்தொற்றாகத் தொடங்கிய கரோனா பரவல், குழந்தைகள் உரிமைகளுக்கான நெருக்கடியாக மாறியுள்ளதாக யுனிசெஃப் வேதனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே ஏப்ரல் மாதத்தில், சிறார் கூர்நோக்கு, வளர்ப்புப் பெற்றோர், உறவினர் இல்லங்களில் வசிக்கும் சிறார்களின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன், குற்றம் நிரூபிக்கப்படாமல் கண்காணிப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களை ஜாமீனில் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் குறித்தும் சிறார் நீதி வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாகக் கடந்த இரண்டு நாட்களாக, பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற சிறார் நீதிக் குழுவும் யுனிசெஃப் நிறுவனமும் ஆய்வு மேற்கொண்டன.

இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:

’’உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நாடு முழுவதும் சிறார் பாதுகாப்பு இல்லங்களில் இருந்த 2,27,518 சிறார்களில் 1,45,788 பேர் (64% குழந்தைகள்) வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் குறைந்தபட்சம் 132 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை அத்தியாவசியச் சேவைகளாக அறிவிக்க வேண்டும். பிரச்சினைகளின் தீவிரத்தை அறிய குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டங்களை ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

குழந்தைகளை வன்முறை மற்றும் குடும்பத்தில் இருந்து பிரிந்துவிடுதல் ஆகியவற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு முறையான மற்றும் முறைசார் கல்விக்கான வாய்ப்புகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்குப் பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகச் செயலர் ராம் மனோகர் மிஸ்ரா கூறும்போது, ''சிறார்களின் பாதுகாப்பு குறித்து விரிவான மாவட்டச் செயல் திட்டங்களின் வரைவறிக்கைகளை அனைத்து மாநிலங்களிடமும் கேட்டுள்ளோம்'' என்றார்.

யுனிசெஃப் இந்தியாவின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் சொலிடேட் ஹெரெரோ கூறும்போது, ''கோவிட்-19 தற்போது குழந்தை உரிமைகளுக்கான நெருக்கடியாக மாறியுள்ளது. சுகாதாரப் பெருந்தொற்றாகத் தொடங்கிய கரோனா பரவல், சமூக, பொருளாதார, மனித உரிமைகளுக்கான நெருக்கடியாக மாறிவிட்டது. குறிப்பாக இதில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x