Published : 04 Dec 2020 07:42 PM
Last Updated : 04 Dec 2020 07:42 PM

மாணவர்களிடையே மத்தியக் கல்வி அமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி: டிச.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடையே கலந்துரையாடும் நிகழ்ச்சி டிச.10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, 2019- 20ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. இதனால் 2020- 21ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ), பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் இவை குறித்த சந்தேகங்களைப் போக்க டிச.4 ஆம் தேதி மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாணவர்களிடம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்வு இணையவழியில் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சி டிச.10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ’’மாணவர்களே, வரப்போகும் நுழைவுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் குறித்து உங்களுக்கு நிறையக் கேள்விகள் இருக்கும் என்று தெரியும். அதனால் உங்களின் அனைத்துச் சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10ஆம் தேதி அன்று உங்களுடன் கலந்துரையாட உள்ளேன். அதுவரை #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகில் உங்களின் கருத்துகள்/ கேள்விகளைக் கேட்கலாம்’’ என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x