Published : 04 Dec 2020 02:20 PM
Last Updated : 04 Dec 2020 02:20 PM

ஜனவரி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதியுங்கள்: அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ கடிதம்

ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சிஐஎஸ்சிஇ வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 2019- 20ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், பள்ளிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை.

இதனால் 2020- 21ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் வாரியம் (சிஐஎஸ்சிஇ) அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், ’’ஜனவரி 4ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பகுதியளவில் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். சந்தேகங்களைத் தீர்ப்பது, செய்முறை விளக்கம், செயல்திட்டப் பணி ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட வேண்டியது அவசியம்.

பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதி கிடைத்தால், அரசு வழங்கியுள்ள அனைத்துப் பாதுகாப்பு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும்’’ என்று சிஐஎஸ்சிஇ தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் 2021 ஏப்ரல் - மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் தேதிகள் குறித்துத் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளது. இதன் மூலம் பொதுத் தேர்வுகளைக் குழப்பமில்லாத வகையில் யாருக்கும் இடையூறு இல்லாமல் நடத்த முடியும் என்றும் சிஐஎஸ்சிஇ சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாது.

சிபிஎஸ்இ-ஐப் பின்பற்றி இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் வாரியமும் (சிஐஎஸ்சிஇ) பொதுத் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறாது என்று அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x