Last Updated : 01 Dec, 2020 03:16 PM

 

Published : 01 Dec 2020 03:16 PM
Last Updated : 01 Dec 2020 03:16 PM

புதுவை அரசு அத்தியாவசியச் சான்று தரும்போதே தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% இடங்களை அரசுக்குத் தரவேண்டும்: கிரண்பேடி தகவல் 

புதுச்சேரி

புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அத்தியாவசியச் சான்று தரும்போதே, தனியார் நிர்வாகத்தினர் 50 சதவீத இடங்களை அரசிடம் தர வேண்டும் என்ற விதியுள்ளது. இதில் 50% இட ஒதுக்கீடு பெற பேச்சுவார்த்தையே தேவையில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதில் மத்திய அரசின் ஜிப்மர், மாநில அரசின் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி தவிர்த்து மீதமுள்ளவை தனியாரிடத்தில் உள்ளன. இதில் 3 தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும், 4 நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும்.

இதில் தனியார் நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் ஒரு இடத்தைக்கூடப் புதுச்சேரிக்கு ஒதுக்குவதில்லை. தற்போது மொத்தம் 1,579 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில், 363 மருத்துவ இடங்கள் மட்டுமே புதுச்சேரி மாநில மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. 1,217 மருத்துவ இடங்கள் வெளிமாநில மாணவர்களுக்கே கிடைக்கின்றன. இதனால் மத்திய அரசின் 2019 மருத்துவச் சட்ட மசோதாவை அமல்படுத்தி புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கான சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் உள்ளதாகப் புதுச்சேரி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இது தொடர்பாக இன்று வெளியிட்ட தகவலில், ''புதுச்சேரி அரசிடமிருந்து கோப்பு வந்தது. மத்திய அரசிடம் உள்ள சட்ட முன்வரைவை நிர்வாகத்துறை சரியாகப் பின்பற்றவில்லை. மத்திய உள்துறைக்கு இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியுள்ளேன். தலைமைச் செயலர் இதைக் கவனிக்க வேண்டுகிறேன். புதுச்சேரி அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அத்தியாவசியச் சான்று தரும்போதே, தனியார் நிர்வாகத்தினர் 50 சதவீத இடங்களை அரசிடம் தர வேண்டும் என்ற விதியுள்ளது.

இதைச் சுகாதாரத்துறை, சென்டாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பான தெளிவான வழிமுறை அரசிடம் உள்ளது. இதில் இட ஒதுக்கீடு பெறப் பேச்சுவார்த்தையே தேவையில்லை. இதன் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்குத் தரவேண்டும். இதன் நகலை முதல்வருக்கும் அனுப்பியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x