Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

சென்னை ஐஐடியில் முதல்கட்ட வளாக நேர்காணல் இன்று தொடக்கம்: முன்கூட்டியே 182 பேர் பணிக்கு தேர்வு

சென்னை ஐஐடி வளாக நேர்காணல் இன்று தொடங்குகிறது. நேர்காணலுக்கு முன்பாகவே 182 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை ஐஐடியில் முதல்கட்ட வளாக நேர்காணல் இன்று(டிச.1) தொடங்குகிறது. இதில்முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளன. இதற்கிடையே, வளாக நேர்காணலுக்கு முன்பாகவே 182 மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், மைக்ரோசாப்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 முன்னணி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, அனலிட்டிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் என வெவ்வேறு பிரிவுகளில் அவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வளாக நேர்காணலுக்கு முன்பாக 170 பேர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்ட நிலையில் இந்தஆண்டு கரோனா சூழலிலும் 182பேர் வேலைக்கு தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பயிற்சி மற்றும் வளாக வேலைவாய்ப்பு பிரிவுஆலோசகரான பேராசிரியர் சி.எஸ்.சங்கர் கூறும்போது, ‘‘வளாக நேர்காணல் தொடங்குவதற்கு முன்பே 182 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது ஐஐடியின் உயர்தர கல்விக்குஎடுத்துக்காட்டு ஆகும். முதல்கட்ட வளாக நேர்காணலிலும் ஐஐடி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பணிவாய்ப்பு பெறுவார்கள்’’ என்றார்.

பணியிடைப் பயிற்சி பிரிவு ஆலோசகர் பேராசிரியர் என்.வி.ரவிகுமார் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு பணியிடைப் பயிற்சிஅளிக்க தொடங்கியது முதல், வளாக நேர்காணலுக்கு முன்பாகவே பணிவாய்ப்பு பெறுவது அதிகரித்து வருகிறது. தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளையும், அங்கு நிலவும் பணிச் சூழலையும் புரிந்துகொள்ள பணியிடைப் பயிற்சி மாணவர்களுக்கு உன்னதமான வாய்ப்புகளை வழங்குகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x