Published : 28 Nov 2020 02:03 PM
Last Updated : 28 Nov 2020 02:03 PM

பாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகப் பள்ளிகளில் கரோனா காரணமாகக் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த அறிக்கை திங்களன்று முதல்வரிடம் ஒப்படைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக் கல்வி முன்னாள் ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தைக் குறைக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. இதையடுத்து எஸ்சிஇஆர்டி சார்பில் பாட அளவு குறைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அறிவிப்பு வெளியாகி 2 மாதங்களாகியும் பாட அளவு குறைப்பு சார்ந்த விவரங்களைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா உட்பட மத்திய வாரியப் பள்ளிகள் கடந்த ஜூலை மாதமே 30 சதவீத அளவுக்கு பாடங்களை குறைத்து, அதன் முழு விவரங்களையும் வெளியிட்டன. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி சிபிஎஸ்இ, கே.வி. பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்தின் சார்பில் குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை இதுவரை அரசு வெளியிடவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை நடத்துவது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவிவருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று ஈரோடு அருகே கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ’’நான்கைந்து நாட்களுக்குள் பாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும்.

எந்தெந்தப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து திங்கட்கிழமை அன்று முதல்வரிடத்தில் அறிக்கையை ஒப்படைக்க உள்ளோம். அதற்குப் பிறகு எந்த எந்தப் பாடங்கள் இணையம் மூலமாகத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x