Published : 28 Nov 2020 01:28 PM
Last Updated : 28 Nov 2020 01:28 PM

தமிழ் வழியில் பொறியியல் கல்வி: மத்திய அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு துணை நிற்கும்- அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

தமிழ் வழியில் பொறியியல் கல்வி என்னும் மத்திய அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு துணை நிற்கும் என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதி அளித்துள்ளார்.

வரும் 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகள் தாய்மொழியில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ''தாய்மொழி வழிக் கற்றல் எப்போதுமே சிறப்பானது. எந்த மொழியைவிடவும் தமிழ் மொழியில் பொறியியல் கல்வி என்பது எளிமையாக ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் செயல்பாட்டுக்கு வரும் என நினைக்கிறேன்.

அதற்குத் தமிழக அரசு அனைத்து விதங்களிலும் முன் முயற்சி எடுக்கும். மத்தியக் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து தாய்மொழி வழிக் கல்விக்கான பாடத்திட்டம், உள்ளடக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளோம். அடுத்த ஆண்டே இதை அமல்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.,

ஆங்கில மொழிப் புலமை இல்லாததால் பொறியியல் படிப்புகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் சேராமல் விலகி இருக்கும் பல மாணவர்களுக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x