Published : 28 Nov 2020 01:03 PM
Last Updated : 28 Nov 2020 01:03 PM

விவசாயிகள் போராட்டம்: டெல்லி - என்சிஆர் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் காரணமாக டெல்லி என்சிஆர் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்தி வருகின்றனர். நவ.26-ம் தேதியில் இருந்து 3 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் விவசாயிகளின் குழுவைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். விவசாயிகள் மீது தடியடிப் பிரயோகமும் நடத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. சோனிப்பேட் பகுதியில் குழுமி இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது.

எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல்துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி என்சிஆர் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாணவர்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''ரோட்டக் பகுதியில் இருந்து வருகிறோம். இங்கு கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. என்னைப் போன்றே ஏராளமான மாணவர்கள் திடீரெனத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தனர்

மற்றொரு மாணவர் கூறுகையில், ''டெல்லியில் வசிக்கிறேன். ரோட்டக் பகுதியில் கல்லூரி உள்ளது. கடைசி நிமிடத்தில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன'' என்று கவலை தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாலும் மாணவர்கள் அவதிக்கு ஆளாகினர்.

விவசாயிகள் போரட்டத்தால் ரோட்டர்- ஜஜ்ஜார் எல்லை, டெல்லி- குருகிராம் எல்லை, டெல்லி- ஜம்மு நெடுஞ்சாலை ஆகிய பகுதிக்ளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x