Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM

வரும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் ஐஐடி, என்ஐடி-களில் தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் அறிமுகம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

வரும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகள் தாய்மொழியில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். இதில் துறை செயலாளர்கள் அமித் கரே, அனிதா கர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில், மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகைகள் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்காக உதவி மையம் தொடங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாணவர்களுக்கான உதவி மையம் தொடங்குவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தொடங்க வேண்டும். கல்வி விஷயங்களில் மாணவர்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவு பிறப்பித்தார்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் கல்வி முறைமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தேசிய கல்விக்கொள்கையை முறையாக அமல்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். இதற்காக ஒரு சில ஐஐடி, என்ஐடி உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன

தேசிய தேர்வு முகமை (என்டிஏ), பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை கொண்டுவரவுள்ளது. தாய்மொழியில் பொறியியல் கல்வி என்பது பல மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கில மொழி புலமை இல்லாததால் பொறியியல் படிப்புகளில் ஆர்வம்இருந்தும் அவற்றில் சேராமல்விலகி இருக்கும் பல மாணவர்களுக்கும் இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

அடுத்த ஆண்டு எப்போது, எப்படி தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துகளை கேட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x