Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நூலகங்களில், குடிமைப்பணி தேர்வுகளுக்கான சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 32 மாவட்ட நூலகங்களில் செயல்படும் சேவை மையங்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 17 ஆயிரத்து 480 மாணவ, மாணவியர் இணையம் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும், இணையம் மூலமும் பாடங்கள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மாணவர்களின் சந்தேகங்களுக்கு பாடவாரியாக ஆசிரியர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் மூலமும், மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், அவரவர் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அவர்களைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புயல் மழை காலத்தில் முதல்வரின் செயல்பாடுகளை அனைவரும் பாராட்டுகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT