Last Updated : 26 Nov, 2020 01:56 PM

 

Published : 26 Nov 2020 01:56 PM
Last Updated : 26 Nov 2020 01:56 PM

கல்விக் கொள்கை அடிப்படையில் வேளாண் பல்கலைக்கழகங்கள் படிப்புகளைப் புதுப்பிக்க வேண்டும்: ராஜஸ்தான் ஆளுநர்

கல்விக் கொள்கையின் நோக்கத்தின் அடிப்படையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், படிப்புகளைப் புதுப்பிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோப்னரில் உள்ள ஸ்ரீ கர்ண நரேந்திர வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கல்ராஜ் மிஸ்ரா கலந்துகொண்டார். அங்கே அவர் பேசியதாவது:

''களத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இருந்து அனுபவ மற்றும் பாரம்பரிய ஆலோசனைகளைப் பெற்று, செயல்வழிப் படிப்புகளைப் பல்கலைக்கழங்கள் உருவாக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின் நோக்கத்தின் அடிப்படையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், படிப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். அவற்றில் அறிவியல், தொழில்நுட்பத்தின் புதிய வேளாண் பரிமாணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மூலம் இந்திய விவசாயத்தை அதிக உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்ததாக மாற்றப் பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாய நிறுவனங்களில் வேளாண்மை மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண்மை வணிக மையங்கள் மூலமாக மாணவர்கள் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க ஊக்கப்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பது அதிக சவாலாக இருக்கும் நிலையை வேளாண் கல்வி நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும்''.

இவ்வாறு ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x