Published : 25 Nov 2020 08:47 PM
Last Updated : 25 Nov 2020 08:47 PM

புயல் எச்சரிக்கை: வேதியியல், கணிதப் பாடங்களுக்கான தேசியத் தகுதித் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேசியத் தகுதித் தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில், பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசியத் தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாத இறுதியில் நடக்கிறது. கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணிபுரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராகப் பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இத்தேர்வு உள்ளது.

இதற்கிடையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு தொடர்ந்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை (நவ.26) தேர்வு (CSIR - NET) நடைபெறுவதாக இருந்தது. எனினும் நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில் தேசியத் தகுதித் தேர்வை ஒத்திவைப்பதாக என்டிஏ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ''திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை (நவ.26) நடைபெற இருந்த கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மறுதேர்வு நடைபெறும் தேதி விரைவில் வெளியிடப்படும்.

மாணவர்கள் https://csirnet.nta.nic.in/ என்ற இணையதளத்தைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x