

நிவர் புயல் தமிழகத்தைத் தாக்கும் நிலையில் தமிழகத்தின் கடலோர, டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை உணர்ந்த தமிழக அரசு, நாளை பொது விடுமுறையை அளித்துள்ளது. இதையடுத்து ஐடிஐ தேர்வுகளையும் அரசு ஒத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நவ.23 முதல் அகில இந்தியத் தொழிற்தேர்வு நடைபெற்று வருகிறது.
நிவர் புயல் காரணமாக தமிழ்நாடு அரசு 7 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் நவ.24 முதல் நிறுத்தம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு ஒப்புதலுடன் நவ.25 முதல் நவ.27 வரை நடைபெறவிருந்த அகில இந்திய தொழிற்தேர்வு (ஐடிஐ) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 3 முதல் டிசம்பர் 5 வரை மாற்றப்பட்டுள்ளது”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.