Last Updated : 24 Nov, 2020 01:25 PM

 

Published : 24 Nov 2020 01:25 PM
Last Updated : 24 Nov 2020 01:25 PM

கரோனா: ஜேஇஇ மெயின் தேர்வுகளை பிப்ரவரிக்குத் தள்ளிவைக்கத் திட்டம்

கரோனா தொற்று காரணமாக பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வுகளை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைக்க என்டிஏ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் மற்றும் கட்டிடவியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஜனவரியில் நடைபெற வேண்டிய தேர்வை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைக்க என்டிஏ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ''கோவிட் தொற்று காரணமாக பொறியியல் மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெற்று வருகிறது. அதேபோல தொற்றுப் பரவல் குறித்த அச்சமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவுகிறது. இவற்றால் ஜனவரியில் நடைபெற வேண்டிய தேர்வை பிப்ரவரி மாதத்துக்குத் தள்ளிவைக்கப் பரிசீலித்து வருகிறோம். இதன் மூலம் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.

விரைவில் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். விண்ணப்பம் பெறும் பணி அடுத்த மாதம் தொடங்கும்'' என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ஜேஇஇ மெயின் தேர்வு, கோவிட்-19 பரவலால் இரு முறை தள்ளி வைக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x