Published : 24 Nov 2020 12:00 PM
Last Updated : 24 Nov 2020 12:00 PM

நிவர் புயல்: இன்று நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக இன்று (நவ.24) நடைபெறுவதாக இருந்த மருத்துவக் கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் நாளை (நவ. 25) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.

சென்னையிலிருந்து தஞ்சை மற்றும் திருச்சி செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று (நவ.24) மதியத்துடன் நிறுத்தப்படுகிறது. அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து மக்கள் வேறு இடங்களுக்குப் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும் ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதாலும் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த மருத்துவக் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நிவர் புயல் காரணமாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் நவ.24 (இன்று) நடைபெற இருந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொடர்ந்து http://tnmedicalselection.net/ என்னும் முகவரியில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x