Published : 21 Nov 2020 12:44 PM
Last Updated : 21 Nov 2020 12:44 PM

மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்கள், 165 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதேபோல், 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதற்கிடையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு 3 நாட்களுக்கு நடைபெற்றது. இந்நிலையில் இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிக்குத் தொடங்கியது.

இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக 46 மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் 51 பேருக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது. அதேபோல முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 400 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நவ.23 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x