Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM
மத்திய அரசின் இந்திரா காந்திதேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பல்வேறு பாடங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த படிப்புகளுக்கான கால வரையறையை நடப்பு ஆண்டு முதல் மாற்றியமைத்துள்ளது.
இதுதொடர்பாக இக்னோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இக்னோ வழங்கும் பல்வேறு தொலைதூரப் படிப்புகளின் கால வரையறையில் புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதுநிலைப் பட்டப் படிப்புகளை இனி அதிகபட்சம் 4 ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை 3 ஆண்டுகளில் படித்து முடிக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளை 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்.
இளநிலை பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்ததுபோல் 3 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளுக்குள் இளநிலை பட்டப்படிப்புகளை முடிக்க வேண்டும். இதற்கு முன்னர் முதுநிலை படிப்புகளை முடிக்க 5 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
அகாடமிக் கவுன்சில் கூட்டம் கடந்த ஜூலை 21 அன்று நடத்தப்பட்டு புதிய மாற்றங்கள் குறித்துமுடிவு செய்யப்பட்டன. ஏற்கெனவே இக்னோவில் படித்துவரும் மாணவர்கள் பழைய கால வரையறையிலேயே படித்து முடிக்கலாம். நடப்பு கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கே இது பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT