Last Updated : 20 Nov, 2020 04:34 PM

 

Published : 20 Nov 2020 04:34 PM
Last Updated : 20 Nov 2020 04:34 PM

மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளைப் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கக் கோரிக்கை: பிரதமருக்குத் தெலங்கானா முதல்வர் கடிதம்

மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைப் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கும்படி தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடிக்குக் கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்துத் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை:

''ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை, வங்கித் துறை, மத்தியப் பொதுப்பணித் துறை உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தற்போது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால் ஆங்கில வழிக் கல்வியைப் படிக்காதவர்களும் இந்தி மொழி பேசும் மாநிலங்களைச் சேராதவர்களும் இத்தேர்வுகளில் வெற்றிபெற முடியாமல் போய்விடுகிறது.

நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சமமான, நியாயமான வாய்ப்பு கிடைக்க மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் பிராந்திய மொழிகளில் எழுதும் வாய்ப்பை மத்திய அரசு நல்க வேண்டும். இதற்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), ரயில்வே தேர்வாணையம், பொதுத்துறை வங்கிகள், மத்திய ரிசர்வ் வங்கி, எஸ்.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வாணையங்கள் பிராந்திய மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்''.

இவ்வாறு பிரதமரிடம் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x