Published : 18 Nov 2020 01:05 PM
Last Updated : 18 Nov 2020 01:05 PM

10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சியும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2020-21ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இணைய வழியில் வகுப்புகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், இணையவழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஊரடங்கு தளர்வை முன்னிட்டு நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் அம்முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்தும் பள்ளிகள் திறப்பு குறித்தும் கேள்வி எழுந்தது.

இதற்கிடையே ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''கரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மாணவர்களுக்கு எவ்வாறு பாடத்திட்டத்தை முடிப்பது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ஒத்தி வைக்கலாமா அல்லது கடந்த ஆண்டைப் போல அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் டிசம்பர் மாத இறுதிக்குள் எடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நடப்புக் கல்வி ஆண்டில் 10, 11, 12-ம்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 2021 ஜூன் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அட்டவணையை அரசிடம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சமர்ப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x