Published : 17 Nov 2020 08:13 PM
Last Updated : 17 Nov 2020 08:13 PM

கர்நாடகாவில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறப்பு; சொற்ப மாணவர்களே வருகை

கர்நாடகாவில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், சொற்ப அளவிலான மாணவர்களே வந்திருந்தனர்.

கரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. நடப்புக் கல்வி ஆண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. இதற்கிடையே அக்.15-ம் தேதி முதல், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மாநில அரசுகளே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நவ.17 ஆம் தேதி முதல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களைத் திறக்கக் கர்நாடக அரசு அனுமதி அளித்தது. ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கரோனா இல்லை என்ற சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களுக்குக் கரோனா சான்றிதழ் அவசியம் ஆகும்.

அதேபோல மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தையும் பெற்று வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகள், ஆய்வகங்கள், கல்லூரி வளாகங்கள் ஆகியவை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி, மகாராணி கல்லூரி, ஆர்.வி. கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. எனினும் குறைந்த அளவிலான மாணவர்களே கல்லூரிகளுக்கு வந்திருந்தனர்.

மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் கிருமிநாசினி நடவடிக்கைகளைப் பின்பற்றத் தாமதமானதாலும், கரோனா சான்றிதழ்களைப் பெறுவதில் கால அவகாசம் தேவைப்பட்டதாலும் ஏராளமான கல்லூரிகள் இன்று திறக்கப்படவில்லை.

போதிய இணைய வசதி, முறையான உபகரணங்கள் இல்லாமை, செய்முறைக் கற்றல் வகுப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் ஆன்லைன் வகுப்புகளைக் காட்டிலும் வகுப்பறைக் கற்றல் அவசியம் என்று துணை முதல்வரும் உயர் கல்வித்துறை அமைச்சருமான அஸ்வத் நாராயண் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x