Published : 13 Nov 2020 03:53 PM
Last Updated : 13 Nov 2020 03:53 PM

ஆசிரியராக மாறிய கல்பாக்கம் பள்ளி மாணவி: பிரதமர் மோடி பாராட்டு

கல்பாக்கத்தில் ஆசிரியராக மாறிக் கற்பித்தலில் ஈடுபட்ட பள்ளி மாணவி இந்திராவுக்குப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கல்பாக்கத்தில் அணுமின் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றுபவர் அர்ஜூன் பிரதீப். இவரின் மகள் இந்திரா 4-ம் வகுப்புப் படித்து வருகிறார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வரும் இந்திரா, பிற நேரங்களில் வேதியியல், விலங்கியல் பாடங்களைத் தத்ரூபமாக விளக்கி வீடியோ எடுக்கிறார். அனிமேஷன் முறையிலும் ஆக்மெண்டட் ரியாலிட்டி வகையிலும் வீடியோக்களை உருவாக்கி, அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.

குறிப்பாக சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் குறித்தும் மனித எலும்புக்கூட்டின் அமைப்பு பற்றியும் இவர் கற்பிக்கும் வீடியோக்கள் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்துப் பிற மாணவர்களும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

இதுகுறித்து இந்திராவின் தந்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ''தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் இணையும் விதத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமி பிரதீபாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x