Last Updated : 13 Nov, 2020 02:24 PM

 

Published : 13 Nov 2020 02:24 PM
Last Updated : 13 Nov 2020 02:24 PM

எம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வுத் தேதி அறிவிப்பு: கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது

கோவை

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் நவ.18-ம் தேதி எம்பிஏ, எம்சிஏ துணைக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளின் முதலாமாண்டில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை, 2020-21 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது.

எம்சிஏ படிப்புக்குக் கடந்த நவ.6 மற்றும் 7-ம் தேதிகளிலும், எம்பிஏ படிப்புக்கு நவ.10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறியதாவது:

''எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு வரும் நவ.18-ம் தேதி கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. முதல்கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், விண்ணப்பித்துக் கலந்துகொள்ள முடியாமல் தவறவிட்டவர்கள், டான்செட் தேர்வெழுதி விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இக்கலந்தாய்வு நடைபெறுகிறது.

எனவே, மாணவர்கள் உரிய சான்றிதழ்கள், கலந்தாய்வுக் கட்டணத்துடன் 18-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரில் வர வேண்டும். தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே துணைக் கலந்தாய்வு நடைபெறும். எஸ்சி பிரிவில் காலியாக உள்ள இடங்களை எஸ்சி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு நவ.19-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்''.

இவ்வாறு தாமரை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x