Published : 12 Nov 2020 06:22 PM
Last Updated : 12 Nov 2020 06:22 PM

ரயில்வே உள்கட்டமைப்பு மேலாண்மையில் 7 படிப்புகள் அறிமுகம்

ரயில்வே உள்கட்டமைப்பு மேலாண்மையில் நல்ல திறன் பெற்றவர்களை உருவாக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையத்தின் சார்பில் ஏழு பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையத்தின் சார்பில் இரண்டு பி.டெக் படிப்புகள், இரண்டு எம்பிஏ படிப்புகள், மூன்று எம்எஸ்சி படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன.

பி.டெக் படிப்புகள் ரயில் கட்டமைப்பு மற்றும் ரயில் தகவல் தொடர்பு பொறியியல், ரயில் முறைகள் ஆகிய பாடங்களைக் கொண்டதாகும். எம்பிஏ படிப்புகள், போக்குவரத்து, விநியோக சங்கிலி மேலாண்மை ஆகியவை குறித்த பாடங்களைக் கொண்டதாகும். எம்எஸ்சி படிப்புகள் சிஸ்டம்ஸ் பொறியியல் மற்றும் ஒருங்கிணைப்பு, கொள்கை, பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்களைக் கொண்டதாகும். எம்எஸ்சி படிப்பு மட்டும் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கப்படுகிறது.

இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் வழங்காத இந்தப் படிப்புகளை தனித்துவமாக தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையம் வழங்குகிறது. இது குறித்து பேசிய ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வி.கே.யாதவ், "தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையம் போக்குவரத்து முறைகள் ஆய்வில் பல்முனை அணுகுமுறையைக் கடைபிடிக்கிறது.

இதன் வாயிலாக பல்வேறு பின்னணிகளில் இருந்து வந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒன்றிணைக்கப்படுகின்றனர். கல்வி மற்றும் தொழில் கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x