Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
அகமதாபாத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்ஹாம், உலகின் இளம் கணினி புரோகிராமர் பட்டத்தை வென்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா உள்ளிட்ட கணினி மொழி ஜாம்பவான்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மவுசு இருந்தது. இன்று அந்த இடத்தை பைத்தான் கணினி மொழி பிடித்துவிட்டது. இன்றைய அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு பைத்தான் கணினி மொழி பிரதானமாக கணினி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பைத்தான் கணினி மொழியை 6 வயதில் கரைத்துக் குடித்து அதில் அட்டகாசமான நிரலை வடிவமைத்திருக்கிறார் சிறுவன் அர்ஹாம்.
அகமதாபாத்தைச் சேர்ந்த இவர் 2-ம் வகுப்புப் படிக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் கணினி நிரல் தேர்வில், தேர்ச்சி அடைந்திருக்கிறார். உலகின் இளம் கணினி புரோகிராமர் பட்டத்தை வென்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
டிஜிட்டல் யுகத்தினருக்கே உரிய சகஜ நிலையில் 2 வயதில் இருந்தே கணினியையும் திறன்பேசியையும் சிறுவன் அர்ஹாம் கையாளப் பழகத் தொடங்கினார். ஆனால், வெறுமனே அவற்றில் வேடிக்கைப் பார்க்காமல் 3 வயது முதலே விண்டோஸ், ஐஓஎஸ் ஆகிய கணினி மற்றும் திறன்பேசியின் ஆபரேட்டிங் சிஸ்டம்ங்களின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். மென்பொறியாளரான தன்னுடைய தந்தை, பைத்தன் கணினி மொழியைப் பயன்படுத்துவதை உற்று கவனிக்க ஆரம்பித்தார். புதிர் போட்டிகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தார். இவருடைய ஆர்வத்தை அறிந்த தந்தை, கணினி நிரலின் அடிப்படையைச் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் தானாகவே பைத்தன் மொழியில் நிரல்களை எழுதுவதில் அர்ஹாம் கில்லாடி ஆனார். அது மட்டுமின்றி சின்ன சின்ன கணினி விளையாட்டுகளையும் தானாக தயார் செய்தார். மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் கணினி நிரல் வடிவமைப்புத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைந்தார். இவற்றை எல்லாம் கின்னஸ் சாதனை நிறுவனத்தில் சமர்ப்பித்தபோது, ‘உலகின் இளம் கணினி புரோகிராமர்’ பட்டம் அர்ஹாமுக்கு வழங்கப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT