Last Updated : 11 Nov, 2020 04:32 PM

 

Published : 11 Nov 2020 04:32 PM
Last Updated : 11 Nov 2020 04:32 PM

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி?  - பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவது எப்படி என்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், தீயணைப்புத்துறையின் வழிகாட்டுதல்களைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு பள்ளி கல்வித்துறையினர் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு உத்தவிட்டுள்ளனர்.

இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாத் தீபாவளியாகக் கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இணையவழியில் நடைபெற்றது. தேசிய மாணவர் படையின் அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட தீயணைப்புத் துறையின் அறிவுரைகள்:

''பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து, அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்கத் தொடங்க வேண்டும்.

பட்டாசுகளைப் பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்கள் மற்றும் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும்.

மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து சற்று ஒதுங்கி, பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் படித்து, அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

ராக்கெட் போன்ற வானவேடிக்கை பட்டாசுகளைப் பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல், கதவுகள், பால்கனி போன்றவை இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

பட்டாசுகளை வெடிக்கும்பொழுது கால்களில் காலணிகளைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

தண்ணீர் நிறைந்த வாளியைப் பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அணைத்து விட முடியும். ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும்.

பட்டாசுகளை வெடிக்கும் பொழுது ஜெர்ஸி, நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தித் துணிகளை அணிய வேண்டும். பட்டாசுகளை வெடிக்கத் தீக்குச்சிகள், சிறிய ஊதுபத்திகளைப் பயன்படுத்தக் கூடாது.

மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்குக் கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது. இரண்டு, மூன்று வெடிகளை இணைத்து வெடிக்கக் கூடாது. உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்கு, ஊதுபத்தி போன்றவற்றை வைக்கக்கூடாது.

வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் பொழுதோ அல்லது வாகனங்களில் செல்லும் பொழுதோ வெடிகளை வெடிக்கக்கூடாது.

அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக்கூடாது. குழந்தைகளின் கைகளில் பட்டாசுகளைக் கொடுத்து ஏற்றக்கூடாது. வீட்டிற்குள்ளே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

நாம் பற்றவைத்த பட்டாசுகள் வெடிக்கவில்லை என்றால் அவற்றைக் கைகளில் தூக்கிப் பார்ப்பது அல்லது கால்களால் தள்ளுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது. அதே போல் சிறிய பாட்டில்கள் பாத்திரங்கள், பெட்டிகளின் உள்ளே வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.

வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது க்ரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்கக்கூடாது. தொளதொளப்பாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

ஆஸ்துமா, அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் தீபாவளி சமயங்களில் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும்''.

இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x