Published : 09 Nov 2020 01:26 PM
Last Updated : 09 Nov 2020 01:26 PM

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?- நவ.12-ல் இறுதி முடிவு: அமைச்சர் அன்பழகன் தகவல்

நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு நவ.12-ம் தேதி எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க மாணவர்களுக்குக் கடந்த சில மாதங்களாக ஆன்லைன், தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை நவ.16-ம் தேதி திறக்கலாம் என்று அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. எனினும் பண்டிகைக் காலம் மற்றும் பருவமழைக் காலம் என்பதால் கரோனா தொற்று அதிகரிக்கலாம் எனப் பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே பள்ளிகளில் 9,10,11,12 ஆம் வகுப்புகளைத் திறக்கவும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் கல்லூரிகள் திறப்புக் குறித்தும் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், நவ.12-ம் தேதி இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த போது, ''கல்லூரிகள் திறப்பு குறித்துப் பல்வேறு தரப்பிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று விவாதித்து வருகிறோம். நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு நவ.12-ம் தேதி எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x