Last Updated : 09 Nov, 2020 12:07 PM

 

Published : 09 Nov 2020 12:07 PM
Last Updated : 09 Nov 2020 12:07 PM

‘அரியர் மாணவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே சேர்க்கை ஆணை’

அரியர் மாணவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே சேர்க்கை ஆணை வழங்கப்படும் என்று எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படிப்புகளின் முதலாமாண்டில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை, 2020-21ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

டான்செட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, நேரடிக் கலந்தாய்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் (ஜிசிடி) ஒருங்கிணைப்பில் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வழக்கமான நடைமுறைகளுக்குப் பதிலாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் கலந்தாய்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறியதாவது:

''அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய டான்செட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டோம். முதலில் எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து கடந்த நவ.6 மற்றும் 7ஆம் தேதிகளில் கலந்தாய்வுக் கட்டணம் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்தனர். தரவரிசை அடிப்படையில் அவர்களுக்குக் கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று (நவ. 9) மாலைக்குள் மாணவர்கள் அதை உறுதிப்படுத்தலாம் அல்லது விலகிக் கொள்ளலாம். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், ஏற்கெனவே அக்கல்லூரியைத் தேர்வு செய்த மாணவர்கள் யாரேனும் விலக நேரிட்டால், அந்த இடத்தைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. நவ.10ஆம் தேதி சேர்க்கை ஆணை வழங்கப்படும்.

இறுதிப் பருவத்தேர்வு முடிவுகள், அரியர் பாடங்களுக்கான முடிவுகளை சில பல்கலைக்கழகங்கள் இன்னும் வெளியிடாததால், அந்த மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை ஆணை அனுப்பப்படாது. அவர்கள் இறுதிப் பருவ மதிப்பெண் சான்றிதழைப் பதிவேற்றம் செய்தவுடன், சேர்க்கை ஆணை அனுப்பப்படும். இதுகுறித்துக் குறுந்தகவல், மின்னஞ்சல் மூலமாக மாணவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

இதேபோல் எம்பிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நவ.10ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும். அதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். நவ.15ஆம் தேதி அவர்களுக்குச் சேர்க்கை ஆணை அனுப்பப்படும். எனவே, மாணவர்கள் இணையதளத்தைத் தொடர்ந்து பார்வையிட வேண்டும்.

எம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வுக் கட்டணத்தைப் பொறுத்தவரை பொதுப்பிரிவினர் ரூ.5 ஆயிரமும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் மாணவர்கள் சேரும் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு விடும். சேர்க்கைக் கட்டணத்தில் இத்தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மாணவர்கள் செலுத்தினால் போதுமானது''.

இவ்வாறு தாமரை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x