Published : 07 Nov 2020 02:57 PM
Last Updated : 07 Nov 2020 02:57 PM

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களைச் சேர்க்க இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி தமிழகம் முழுவதும் 8,608 தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 86,318 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து மீதமுள்ள 55,000 இடங்களை நிரப்புவதற்கான 2-ம் கட்டச் சேர்க்கைப் பணிகள் அக்.12-ம் தேதி தொடங்கின. இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், மாணவர்களைச் சேர்க்க இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் (நவ.7) ஆகும்.

தேர்வான மற்றும் நிராகரிக்கப்பட்ட மாணவர்களின் விவரம் நவ.11-ம் தேதி தெரிவிக்கப்படும். ஒரு பள்ளியில் விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்திருந்தால் நவ.12-ம் தேதி குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். அவர்களை நவ.15-ம் தேதிக்குள் உரிய பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x