Last Updated : 07 Nov, 2020 02:25 PM

 

Published : 07 Nov 2020 02:25 PM
Last Updated : 07 Nov 2020 02:25 PM

எழுத்தறிவு இயக்க முன்னெடுப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2.84 கோடி நிதி

வயது வந்தோருக்கான எழுத்தறிவு இயக்கங்களை முன்னெடுத்து வரும் கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2.84 கோடி நிதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 'பத்னா லிக்னா அபியான்' என்ற பெயரில் எழுத்தறிவு, வாசிப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் இலக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைவரும் 100 சதவீத எழுத்தறிவை அடைவதாகும். இதன் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட, கிராமம் மற்றும் நகரங்களில் வாழும் சுமார் 57 லட்சம் படிப்பறிவில்லாத மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதாகும்.

இத்திட்டத்தின் அடிப்படையில் கற்பித்தலுக்கான நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். அந்த வகையில் கேரள மாநிலத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2.84 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்துக் கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் இயக்குநர் பி.எஸ்.ஸ்ரீகலா கூறும்போது, ''இதில் மாநில அரசின் பங்காக ரூ.1.9 கோடி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், கடற்கரையோரங்களில் வாழும் மக்கள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முதல் கட்டமாகக் கல்வி அறிவில் பின்தங்கியுள்ள வயநாடு, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 1.15 லட்சம் பேருக்குக் கல்வி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

கேரளத்தில் மொத்தம் 18 லட்சம் எழுத்தறிவற்றவர்களும், 12 லட்சம் புதிதாக எழுத்தறிவு பெற்றவர்களும் உள்ளனர். குறிப்பாக நகரத்தைச் சேர்ந்த குடிசைப் பகுதிகளிலும் கடற்கரைக் கிராமங்களிலும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளிலும் எழுத்தறிவின்மை அதிகப்படியாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் எழுத்தறிவு இயக்கத்துக்காக தென்னிந்திய மாநிலங்களில் முதல் முறையாகக் கேரளா, மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x